போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

world 177

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo XIV) முன்வைத்த விமர்சனங்களுக்கு அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்ஜியாவின் ஏதென்ஸில் நடைபெற்ற ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ நிகழ்வில் உரையாற்றிய அவர், இறையியல் விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது போப்பாண்டவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“ஒரு காலத்தில் வாள் ஏந்தி, இன்று குண்டுகளை வீசுபவர்களின் பக்கம் இயேசு ஒருபோதும் இருப்பதில்லை” என்று போப் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த வேன்ஸ், இரண்டாம் உலகப் போரின்போது நாஜிகளிடமிருந்து பிரான்ஸை விடுவித்த மற்றும் ஹோலோகாஸ்ட் சித்திரவதை முகாம்களில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றிய அமெரிக்க வீரர்களின் பக்கம் கடவுள் நிச்சயமாக இருந்தார் என வாதிட்டார். போப் இத்தகைய வரலாற்று உண்மைகளைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தினார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை போப் கண்டித்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போப் லியோ இடையே கடந்த சில நாட்களாகக் கடுமையான வார்த்தைப் போர் நிலவி வருகிறது. போப் “வெளியுறவுக் கொள்கையில் பலவீனமானவர்” என ட்ரம்ப் விமர்சித்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு தனக்கு “எந்த அச்சமும் இல்லை” என போப் பதிலடி கொடுத்திருந்தார். தனது அமைதிக்கான வேண்டுகோள்கள் நற்செய்தியில் (Gospel) வேரூன்றியவை என்றும், அவற்றை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றும் போப் உறுதியளித்துள்ளார்.

கத்தோலிக்கரான ஜே.டி. வேன்ஸ், போப்பாண்டவருடன் சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், மதகுருமார்கள் அரசியல் கொள்கைகளை விடச் சத்தியத்தில் வேரூன்றிய இறையியலைப் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், போப்பாண்டவர் மீதான ட்ரம்ப்பின் விமர்சனங்கள் மற்றும் ட்ரம்ப் தன்னை கிறிஸ்துவைப் போன்ற உருவத்தில் சித்தரிக்கும் ஒரு AI படத்தைப் பகிர்ந்தமை ஆகியவை அமெரிக்க கத்தோலிக்க மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

Exit mobile version