தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான, போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் அமைந்துள்ளன.
முறையான தங்குமிட வசதிகள் இல்லாத காரணத்தால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பகுதிகளில் கடமையாற்ற விரும்புவதில்லை. இது குறிப்பாகத் தரம் 10 முதல் உயர்தரம் வரையிலான வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில், தோட்டப் பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மிகவும் குறைவாக உள்ளன.
தகுந்த கல்வி கிடைக்காததால், தோட்டப்புற இளைஞர்கள் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் சமூகச் சிக்கல் உருவாகியுள்ளது.
தோட்டப் பாடசாலைகளின் மனிதவளத்தை உறுதிப்படுத்த, தங்குமிட வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகள் கட்டப்படும்.
இந்தத் திட்டம் அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாகத் தோட்டப் பகுதிகளில் நிலவி வரும் கல்விச் சமத்துவமின்மை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

