யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புத்துறை வீதியில், நெடுங்குளம் சந்திக்கு அருகிலேயே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டருடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம் மாணியம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரொபின்சன் டட்னி மற்றும் அவரது சகோதரியான 19 வயதுடைய ரொபின்சன் டில்ஷிகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் உயிர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் யாழ்ப்பாணப் பொலிஸார், டிராக்டர் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், வாகனச் செலுத்துநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

