கட்டுநாயக்க விமான நிலையத்தில் 57 விமான சேவைகள் இன்று ரத்து: தவிக்கும் பயணிகள்

14 2

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (மார்ச் 03, 2026) ரத்து செய்யப்பட்டுள்ளன. வான்பரப்புகள் மூடப்பட்டிருப்பது மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, விமான நிறுவனங்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளன.

இன்று  நாட்டிலிருந்து வெளியேறவிருந்த  28  விமானங்கள், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானங்கள், நாளை (மார்ச் 04) ரத்து செய்யப்பட்டுள்ள 4 விமானங்கள்:  ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல இது குறித்துத் தெரிவிக்கையில், மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் மட்டுமன்றி, அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய சர்வதேச நாடுகளுக்குப் பயணிக்கும் விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இன்று காலை சில விமானங்கள் மட்டும் குறித்த வான்பரப்பினூடாகப் பயணித்த போதிலும், பாதுகாப்பு கருதி பெரும்பாலான சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) போன்ற முன்னணி நிறுவனங்கள் துபாய், தோஹா, குவைத், தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவிப்பதுடன், மாற்றுப் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமானப் பயணச்சீட்டுகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய கிழக்கு வான்பரப்பில் நிலவும் பதற்றம் தணியும் வரை இந்த விமான ரத்துகள் நீடிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பயணிகள் தங்களின் பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் இணையதளம் வாயிலாக விமானத்தின் தற்போதைய நிலையை (Flight Status) சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Exit mobile version