தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவைப் பலப்படுத்துக: ஜனாதிபதிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

images 25

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் (RTI Commission) சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஜனாதிபதிக்கு நேற்று (19) அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், ஆணைக்குழு தற்போது எதிர்கொண்டுள்ள பின்வரும் சிக்கல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான ஊழியர் பற்றாக்குறை மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை.

இத்தகைய குறைபாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன், அதன் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குப் பெரும் தடையாக உள்ளன.

தகவல் வழங்கத் தயக்கம்: குறிப்பாகக் காவல்துறை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் தகவல்களை வழங்குவதில் காட்டும் தயக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆணைக்குழுவின் பணிகளைச் சீராக முன்னெடுக்கத் தேவையான நிதி மற்றும் மனித வளங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசியலமைப்பின் 14 (அ) உறுப்புரையின் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான ‘தகவல் அறியும் உரிமையை’ எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி பாதுகாக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குடிமக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்படக்கூடிய எந்தவொரு திருத்தத்தையும் சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஏதேனும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படின், அதற்கு முன்னர் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களுடன் முறையான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.

ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இந்த ஆணைக்குழுவின் நிதிச் சுதந்திரம் மற்றும் தன்னாட்சி மிக முக்கியமானது என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version