ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) பகுதியில் வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்ட ட்ரோன் ஒன்றின் பாகங்கள் சிதறி விழுந்ததில், வங்கதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை (ஏப்ரல் 01, 2026) அதிகாலை இடம்பெற்ற இந்த இடைமறிப்பு நடவடிக்கையின் போது, சிதறிய பாகங்கள் அருகில் இருந்த பண்ணை ஒன்றின் மீது விழுந்ததில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் துபாயைத் தளமாகக் கொண்ட ‘கலீஜ் டைம்ஸ்’ (Khaleej Times) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே நிலவி வரும் மோதல்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அமீரக ஆயுதப்படை உறுப்பினர்கள் இருவர், மொராக்கோ ஒப்பந்தப் பணியாளர் ஒருவர் மற்றும் பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படையினர் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 12 ஏவுகணைகள் மற்றும் 36 ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) எதிர்கொண்டு வெற்றிகரமாக அழித்துள்ளனர். இருப்பினும், இவ்வாறான இடைமறிப்பு நடவடிக்கைகளின் போது வானில் இருந்து விழும் பாகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. போர் பதற்றம் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை மொத்தம் 188 பேர் காயமடைந்துள்ளதாக அமீரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் பொதுமக்கள் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களால் சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் பிராந்தியத்தின் வர்த்தக நடவடிக்கைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

