நாட்டில் மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தடவை மட்டும் பயன்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தும் மேலும் ஏழு பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கு கடந்த வாரம் கூடிய அமைச்சரவை, அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றுக்கே தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.