மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது இராணுவ வளங்களை இப்பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) அறிவித்துள்ளார். தற்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக (Contingency Plan), அங்கு சிக்கியுள்ள அவுஸ்திரேலியப் பிரஜைகளை மீட்பதற்கும் அவசர கால உதவிகளை வழங்குவதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் எஸ்பிஎஸ் நியூஸ் (SBS News) தகவல்படி, இதற்காக இரண்டு இராணுவ விமானங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு கனரக போக்குவரத்து விமானம் (C-17A Globemaster) மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் (KC-30A) ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விமானங்கள் எங்கு தரையிறக்கப்பட்டுள்ளன என்பது குறித்த மேலதிக விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை. அத்தோடு, ஆறு நெருக்கடி கால பதில் குழுக்களும் (Crisis Response Teams) அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 115,000 அவுஸ்திரேலியப் பிரஜைகள் வசிக்கின்றனர். தற்போது வான்பரப்பு மூடப்பட்டிருப்பதாலும், வான்வழிப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளதாலும் அவர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், வணிக ரீதியான விமானங்கள் (Commercial Flights) மூலம் மக்களை மீட்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், நிலைமை மோசமடைந்தால் மட்டுமே இராணுவ விமானங்கள் வெளியேற்ற நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்தப்படும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் மோதல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. சைப்ரஸ் போன்ற பகுதிகளில் உள்ள இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படுவதால், அவுஸ்திரேலியா தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்கூட்டியே இந்த இராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதேபோல் நியூசிலாந்து போன்ற ஏனைய நட்பு நாடுகளும் தமது இராணுவ விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

