அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ தடை விதிக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese), ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் இந்தப் பரிந்துரைக்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024’ (Online Safety Amendment Act 2024) என்ற பெயரில் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் சிறார்களின் ஒன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.