வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

images 14 1

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை கோட்பாடுகளையும் மீறும் செயலாகும் என அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான விவாதத்தில் உரையாற்றிய அவர், வெனிசுவேலாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரை மற்றொரு நாடு கைது செய்து நாடு கடத்துவது ஜனநாயகத்திற்கு முரணானது. இதனைத் தமது கட்சி (NPP) வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில் அந்நாடு கல்வி மற்றும் சுகாதார சேவைகளை இலவசமாக்கி முன்னேற்றமடைந்தது. ஒரு நாட்டின் தலைவர் குறித்துத் தீர்மானிக்கும் உரிமை அந்த நாட்டு மக்களுக்கே உண்டு; பிற நாடுகள் உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது.

1945-இல் ஐநா சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதே ஆகும். தற்போதைய அமெரிக்காவின் போக்கு அந்த நோக்கத்தைச் சிதைப்பதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி 31 சர்வதேச அமைப்புகள் மற்றும் 35 சர்வதேசத் திட்டங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளமையை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதில் இலங்கையுடன் தொடர்புடைய ‘கொழும்புத் திட்டம்’ (Colombo Plan) உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்ட அவர், இது தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version