சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

08 2

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் ஒருவரைச் சுன்னாகம் பொலிஸார் துரித விசாரணைகளை அடுத்துக் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரை வழிமறித்த இனந்தெரியாத நபர், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை லாவகமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்துச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மைலிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் இக்குற்றத்துடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version