தட்சசீலத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான குஷான கால நாணயங்கள் கண்டெடுப்பு: உலகளாவிய வணிக மையம் என்பது உறுதி!

kalvi L 260112092401000000

பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க தட்சசீலம் (Taxila) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டுகள் பழமையான குஷானப் பேரரசு காலத்து நாணயங்கள் மற்றும் விலைமதிப்பற்ற தொல்பொருட்களை அந்நாட்டுத் தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இவை குஷானப் பேரரசின் கடைசி மன்னர்களில் ஒருவரான மன்னர் வாசுதேவாவின் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்த வெண்கல நாணயங்களாகும்.

நாணயங்களின் ஒருபுறம் மன்னர் வாசுதேவாவின் உருவமும், மறுபுறம் ஒரு பெண் தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. பீர்மவுன்ட் என்ற இடத்தில் மிகவும் தொன்மையான ‘லேபிஸ் லாசுலி’ (Lapis Lazuli) எனப்படும் விலைமதிப்பற்ற நீலக்கல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குஷான மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பின்பற்றாமல் இந்திய, ஈரானிய, கிரேக்க மற்றும் புத்த மதக் கடவுள்களைத் தங்கள் நாணயங்களில் பயன்படுத்தியுள்ளனர். இது அவர்களின் மத சகிப்புத்தன்மையைக் காட்டுகிறது.

இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் தட்சசீலம் ஒரு காலத்தில் உலகளாவிய வணிக மையமாகத் திகழ்ந்தது உறுதியாகியுள்ளது.

தட்சசீலம், மௌரியப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரத்துடன் (இன்றைய பாட்னா) நெருங்கிய கலாசார மற்றும் வணிகப் பரிமாற்றங்களைக் கொண்டிருந்தது. கனிஷ்கர் போன்ற மன்னர்களின் கீழ் தட்சசீலம் நிர்வாக மையமாக மாறியதுடன், கிரேக்கம், பாரசீகம் மற்றும் இந்தியக் கலைகள் இணைந்த ‘காந்தாரக் கலை’ வளரவும் இது முக்கிய இடமாகத் திகழ்ந்தது.

 

 

Exit mobile version