ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) வன்மையாகக் கண்டித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள விசேட கண்டன அறிக்கையில், ஈரானின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்குத் தமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ரிஷாட் பதியுதீன், இந்தத் துயரமான தருணத்தில் ஈரானிய மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட தலைவரின் மரணம் மட்டுமல்லாது, ஒரு சுதந்திர தேசத்தின் தனித்துவம் மற்றும் இறைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்ட விதிகளை மீறி நடத்தப்பட்டுள்ள இக்கொடூரமான தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்திரத்தன்மையை இழந்து குழப்பத்தில் மூழ்கியுள்ளன. இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் அப்பகுதியில் வன்முறை தலைதூக்கியுள்ளது. இத்தகைய அராஜகச் செயல்களை ஒருபோதும் நீதிக்கு முன்னால் நியாயப்படுத்த முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டினதும் ஜனநாயகக் கட்டமைப்பும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமாயின், அங்கிருக்கும் நாடுகளின் உரிமைகளும் ஆள்புல ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில், மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களில் அத்துமீறிச் செயல்படுவதை ஏற்க முடியாது எனவும், அமைதியே தற்போதைய உலகிற்குத் தேவையானது எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.