இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இன்றுடன் (ஜனவரி 16) இலங்கையிலிருந்து விடைபெறுகிறார். இதனை முன்னிட்டுப் பிவிதுரு ஹெல உறுமயவின் (PHU) தலைவர் உதய கம்மன்பில தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய உதய கம்மன்பில, கடந்த நான்கு வருடங்களாக ஜூலி சங் இலங்கையில் இருந்த காலப்பகுதியை ஒரு “சாபம்” (Curse) என்று வர்ணித்தார்.
ஜூலி சங்கின் வெளியேற்றத்தை நாடு முழுவதும் மக்கள் மேளம் அடித்து, பால்சோறு சமைத்துக் கொண்டாட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் பால்சோறு உண்டு தனது கொண்டாட்டத்தைத் தொடங்கினார். 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதவியேற்ற ஜூலி சங், இன்றுடன் தனது நான்கு வருடக் கடமையை நிறைவு செய்கிறார்.
இவரது காலத்தில் அமெரிக்கா – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. அத்துடன் பொருளாதார நெருக்கடி மற்றும் சமீபத்திய ‘டித்வா’ சூறாவளி அனர்த்தங்களின் போது அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
உதய கம்மன்பில உள்ளிட்ட சில அரசியல் தரப்பினர், ஜூலி சங் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதாக நீண்டகாலமாகவே குற்றம் சுமத்தி வந்தனர். குறிப்பாக, ‘அரகலய’ போராட்டக் காலம் மற்றும் இலங்கையின் இறைமை தொடர்பான விடயங்களில் அமெரிக்கத் தூதுவரின் நிலைப்பாடுகளை இவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.