உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, உலகில் ஒவ்வொரு ஏழு நபர்களில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகையான மனநலப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தேசிய மனநல மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேசிய மனநல மருத்துவமனை (National Institute of Mental Health – NIMH) அண்மையில் 100 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு வருடமும் 50,000-க்கும் அதிகமான நோயாளர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளொன்றுக்குச் சுமார் 600 நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்படுகின்றன.
பணிப்புறக்கணிப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் போன்ற சூழல்களிலும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனை சேவைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன.
இன்றைய இளைஞர்கள் தங்களது மனநலப் பிரச்சினைகளைப் பிறரிடம் நேரடியாகப் பேசத் தயங்குவதை உணர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிறர் கேட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருப்பவர்கள், இனி தமது பிரச்சினைகளை வட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பித் தீர்வு பெறலாம்.
அவசரத் தேவைகளுக்காகவும் ஆலோசனைகளுக்காகவும் 1926 என்ற துரித தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் பயன்பாட்டில் உள்ளது.
எவ்வித முன்னறிவிப்புமின்றி எவரும் எந்நேரத்திலும் ஆலோசனைகளுக்காக மருத்துவமனைக்கு நேரில் வரலாம் என மருத்துவர் தம்மிக அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

