6 விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 மூத்த விரிவுரையாளர்களை பேராசிரியர்களாகப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாதாந்த கூட்டம் இன்று சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்த மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 6 மூத்த விரிவுரையாளர்களின் விவரங்கள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்ப தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வை பேரவை அங்கீகரித்துள்ளது.

அதன்படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி சி. ராஜேந்திரா, சத்திர சிகிச்சையில் பேராசிரியராகவும், மருத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என். சுகந்தன், மருத்துவப் பேராசிரியராகவும், மகப் பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப் பேற்றியல் மற்றும் பெண்நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி கே. முகுந்தன், மகப் பேற்றியல் மற்றும் பெண்நோயியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கு பேரவை ஒப்புதலளித்துள்ளது.

AF0

இவர்களுடன், மேலும் கலைப்பீடத்தில் இருந்து பீடாதிபதியும் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி கே. சுதாகர், தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (செல்வி) எஸ்.சிவசுப்ரமணியம், பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.விஜயகுமார் ஆகியோரை முறையே புவியியல், தமிழ், பொருளியல் துறைகளில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கும் பேரவை ஒப்புதலளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையான பேராசிரியர் பதவியுயர்வுகள் வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version