இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ஆகிய இரு தரப்பினரையும் சமமாகப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வாடகைச் சட்டம், வாடகைக்கு இருப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமானச் சாதகங்களை வழங்குவதாகக் கருதப்பட்டது. இதனால், உரிமையாளர்கள் தமது வீடுகளை வாடகைக்கு விடத் தயக்கம் காட்டியதுடன், இது வீட்டுச் சந்தையில் தேக்கநிலையை உருவாக்கியிருந்தது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, புதிய சட்டத்தின் சில முக்கிய அம்சங்களை விளக்கினார். வாடகை செலுத்தத் தவறினாலும் அல்லது ஒப்பந்தம் மீறப்பட்டாலும், முறையான நீதிமன்ற உத்தரவின்றி எவரையும் வெளியேற்ற முடியாது.
வாடகைதாரரை வெளியேற்றும் நோக்கில் மின்சாரம் அல்லது நீர் விநியோகத்தைத் துண்டிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோர் இச்சட்டமூலம் குறித்துச் சில கரிசனைகளை வெளியிட்டுள்ளனர். வாடகை செலுத்தாதவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாமல் போனால், அது உரிமையாளர்களுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும், இது வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கி வாடகை உயரக் காரணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் இன்று (பெப். 03) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது ஆலோசனைகள் அல்லது ஆட்சேபனைகளை நீதி அமைச்சுக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

