இலங்கைக்கு வரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் மீண்டும் ஒருமுறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு, சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இன்று (30) முற்பகல் தீயிட்டு அழிக்கப்பட்டன.
மொத்தம் 232,804,000 சிகரெட்டுகள். கெரவலப்பிட்டியவில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் வைத்து இவை எரிக்கப்பட்டன.
சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான வந்தனா புஞ்சிஹேவா மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 305 மில்லியன் ரூபா ஆகும்.
இந்தச் சிகரெட்டுகள் உள்நாட்டுச் சந்தைக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருந்தால், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 271 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைச் சுங்கச் சட்டங்களின்படி, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் எவரும் (சுற்றுலாப் பயணிகள் உட்பட) சிகரெட்டுகளைத் தம்வசம் வைத்திருப்பது அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி கொண்டு வரப்படும் சிகரெட்டுகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட பயணிகள் மீது பாரிய அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.