நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை தம்புள்ளை – ஹபரணை வீதியின் இநாமலுவ பிரதேசத்தில், சுவிஸ் சந்தி திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ரொட்டவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரம், நேற்று (02) பிற்பகல் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நாரம்பிட்டிய சந்தைப் பகுதியில் கொழும்பு திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 19 வயதுடைய கிகுல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நேற்று பிற்பகல் வாரியபொல – சிலாபம் வீதியின் பண்டாரகொஸ்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், 25 வயதுடைய யஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை புத்தளம் – திருகோணமலை வீதியின் மாத்தளைச் சந்தி பகுதியில் அநுராதபுரம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பெண் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இரத்தினபுரி – பாணந்துறை வீதியின் முணசிங்கபுர பகுதியில் இரத்தினபுரி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எரிபொருள் பவுசருடன் மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர் பவுசரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அயகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண் என்பதுடன், காயமடைந்த மேலும் நால்வர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நேற்று பிற்பகல் காங்கேசன்துறை – பருத்தித்துறை வீதியின் ஊரணிச் சந்தி பகுதியில் காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இராணுவ ட்ரக் வண்டி ஒன்றுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த 62 வயதுடைய பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

