மலையகத் தமிழர் அபிலாஷைகள் ஆவணம் ஜப்பானியத் தூதுவரிடம் கையளிப்பு!

Japanese Amb 160322

மலையகத் தமிழர் அபிலாஷைகள் ஆவணம் ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியால் கையளிக்கப்பட்டது.

ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பற்றி ஆவணத்தைத் தூதுவரிடம் கையளித்தனர்.

மலையகத் தமிழர் அபிலாஷைகள் ஆவணத்துடன், மலையகக் கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜப்பானிய அரசையும், மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, அரசியல்துறை மற்றும் முதலாம் செயலாளர் தகேசி ஒசாகி, அரசியல்துறை ஆய்வாளர் கநா மொரிவகி ஆகியோர் பங்குபற்றினர்.

மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களைப் பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களைப் பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவிடவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, த.மு.கூ. தலைவர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையகத் தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் குறித்துக்கொள்வதாகவும், ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் உறுதியளித்தார்.

ஐ.நா. அறிக்கையில் மலையகம் பற்றி இன்னமும் முறையாகப் போதியளவு குறிப்பிடப்படாமை பற்றியும் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி வினவினார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, தற்போது ஒரு அரசியல் தலைமையாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்தப் படிவரிசையில் நாம் மலையக விவகாரங்களைப் படிப்படியாக சர்வதேச மயப்படுத்தி வருகின்றோம். அந்த அடிப்படையிலேயே மலையகத் தமிழர் அபிலாஷைகள் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இந்தச் சந்திப்பு நிகழ்கின்றது. ஏனைய சர்வதேச நட்பு நாடுகளின் பிரதிநிதிகளையும், ஐ.நா. வதிவிட பிரதிநிதியையும் சந்திக்க நாம் தீர்மானித்துள்ளோம் எனத் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜப்பான் எப்போதுமே இலங்கை மக்களால் பெரிதும் விரும்பப்படும் நட்பு நாடு என்ற முறையில் எமது மக்கள் தொடர்பில் ஜப்பானியத் தூதுவரின் கருத்துக்களைத் தாம் முழுமனதுடன் வரவேற்றதாகவும், அதேவேளை இலங்கை அரசுடன் இருக்கின்ற நட்புறவைப் பயன்படுத்தி, மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பில் அக்கறையை அதிகரிக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தும்படி தாம் ஜப்பானைக் கேட்டுக்கொண்டதாகவும், மலையக மக்கள் தொடர்பில் கல்வி வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும்படி ஜப்பானிய அரசைக் கோரியதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version