உலகம் 2021 ஆண்டுகள் நிறைந்து 2022ல் புத்தாண்டு பிறக்கிறது என்று இதயம் பொங்கி மகிழும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு வாழ்க என வாழ்த்தி நிற்கின்றோம்.
இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
எல்லோரும் எதிர்காலம் சிறந்த வாழ்வைத் தருமென்று புதிய நம்பிக்கையுடன் புத்தெழுச்சியுடன் இதயம் பொங்கிவாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்.
2021 பிறந்தபொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் இலட்சோப இலட்சம் மக்கள் உயிர்களைப் பறிகொடுத்தும், உயிர்களுக்காகப் போராடிக் கொண்டுமிருந்தனர்.
உலகில் இத்தனை வளர்ச்சியடைந்தபொழுதும் வேற்று உலகக் கிரகங்களைக்கூட கால்பதித்துக் கண்டிறிந்து செல்லும் அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த விஞ்ஞானிகள் உலகில் கொரோனா முதலான கொடிய நோய்களால் மக்கள் அழிவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுதும் திரிபடைந்த ஒமைக்ரோன் வைரஸ் பரவுகிறது.
தினமும் பசியால் பட்டினியால் வாழ்விழந்த மக்கள் பெருக்கமும், நோயில் வீழ்ந்து உயிருக்காகப் போராடும் மக்களும், அடிமைத்தளையறுத்து சுதந்திரமாய் ஆளும் நாடுகளும், மக்கள் விடுதலைக்காக பிளவுற்றும் உயிர் கொடுத்தும் விடுதலைக்காய் போராடுவோருமாய் உலகம் இருண்டும் கிடக்கிறது.
இலங்கையிலும் கிடைத்த சுதந்திரமும் இழந்து, ஆளும் ஆட்சிகளுக்குள், இராணுவமய நிர்வாகத்துள் இலங்கைத் தமிழ் மக்களும் அடிமைத்தளையறுக்கும் விடுதலைக்கும் ஜனநாயகத்திற்கும் ஆளும் உரிமைக்கும் வாழும் உரிமைக்குமாய் போராடும் மக்களாய் வாழ்கின்றனர். போராடுகின்றனர்.
அதனால்தான் 2022ல் ஆவது நம்பிக்கை இழந்து போகாது புதிய நம்பிக்கை பிறக்கவேண்டுமென வாழ்த்துகிறோம்.2022லும் புதிய உலக ஒழுங்குகளில் பாரியு உலக ஒழுங்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் வலிந்து வருகின்றன. இதற்கான அரசியல், போர்க் கொந்தளிப்புக்களும் இந்துமாசமுத்திரப் பிராந்தியம், தென்சீனக்கடல் பிராந்தியம், ஆசிய பசுபிக் சமுத்திரப் பிராந்தியங்களில் வல்லாண்மை ஆதிக்கப் போட்டிகள் வலுப்பெற்றிருக்கின்றன.
இந்துமா சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய சீன வல்லாண்மைப் போட்டிகள் அமெரிக்க இந்திய அவுஸ்திரேலிய ஜப்பான் கூட்டுப் பாதுகாப்பு முன்னெடுப்புக்கள் இதனிடையே இலங்கையில் தமிழர் தாயகப் பிராந்தியம் விடுதலைக்கான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை தமிழர் தாயக மக்கள் முன்னுள்ளன.
இலங்கையில் சிங்கள பௌத்த – பெரும்பாண்மைத்துவ அடிப்படைவாத இராணுவ நிர்வாகத்துவ ஆட்சிக்கெதிரான ஜனநாயக அரசியல் ஆட்சிக்கான நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் முன்னெடுப்பதும் அவசியமாகின்றது.
யேசுபிரான் பிறப்போடு நத்தார் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக மதங்களின் நல்லிணக்கத்துடன் புத்தாண்டை வரவேற்பதோடு தை பிறந்தால் நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும் – என மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews