நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு
கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாமை மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறுதல் ஆகியவை வைரஸ் பரவலுக்கு இடமளிக்கின்றன. இவை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
இதேவேளை, நாட்டில் தற்போதைய நிலைமை தொடர்ந்தால் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 ஐ எட்டும்போது, நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் ஆகக் காணப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டில் கொரோனாத் தொற்று நிலைமை கட்டுமீறிச் சென்றுள்ள நிலையில், இன்றோ நாளையோ பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் நடத்தப்படும் கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் கூறப்படுகின்றது.