பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று (04) உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனவரி 17ஆம் திகதி, குறித்த சிறுமி மேலதிக வகுப்பு (Tuition Class) முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தம்பால பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியின் தலையில் கோடரியால் பலமாகத் தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி, பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், காயங்களின் வீரியம் காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகத் தாக்குதலை நடத்திய 26 வயது இளைஞரைப் புலஸ்திகம பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கான பின்னணி என்ன? தனிப்பட்ட கோபமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துப் புலஸ்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.