வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த 16 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலையின் ‘K’ வார்டில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் இந்தத் திடீர் சோதனையை முன்னெடுத்தனர். கைதிகளின் அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கையடக்கத் தொலைபேசிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வார்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் சுமார் 150 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் மூலம் கைதிகள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் மற்றும் எவ்வாறான உரையாடல்களை மேற்கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காக, அவை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பூசா சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் பதற்றமான சூழல் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

