முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – குரவில் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் இன்று (02) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 11-ஆம் திகதி.உடையார்கட்டு குரவில் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.
இதன்போது, அதே இடத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் (19 வயது) என்பவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தார். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான வழக்கு, ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.
கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று பகல் 12 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
மரண தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன.அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌனம் காக்க, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.