யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த பத்து வருடங்களாக வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் எவரும் நியமிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. அதே பிராந்தியத்தில் உள்ள ஏனைய சில பாடசாலைகளுக்கு வரலாற்றுப் பாடத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாடசாலை மட்டும் கடந்த தசாப்த காலமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இது குறித்துக் கடும் அதிருப்தி வெளியிட்ட பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ பவானந்தராஜா, மாகாண கல்விப் பணிப்பாளரிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பினார்.
மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் இந்த நீண்டகால ஆசிரியர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தியுள்ளார்.