டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தின் சாரதி மீது, தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இ.போ.ச பேருந்து 5 நிமிடங்கள் முன்கூட்டியே தனது பயணத்தை ஆரம்பித்ததாகக் கூறப்படும் அற்பக் காரணத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6:30 மணியளவில் டயகமவில் இருந்து புறப்பட்ட பேருந்தை, லிந்துலை – மெராயா நகருக்கு அருகில் வைத்து தனியார் பேருந்து சாரதி வழிமறித்துள்ளார்.
வழிமறித்த கையோடு இ.போ.ச பேருந்தின் சாரதி ஆசனத்தின் கதவைத் திறந்து, தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹட்டன் டிப்போ தரைக்கால முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதல் நடந்த சமயத்தில் பேருந்தினுள் ஏராளமான பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் கண்முன்னே இந்த வன்முறை அரங்கேறியதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக ஹட்டன் டிப்போ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேர ஒழுங்கு தொடர்பான தகராறுகள் மலையகப் பகுதிகளில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களிடையே அடிக்கடி நிகழ்வது வழமையாகிவிட்ட நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது குறித்துப் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

