ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

rajith

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு எதிரான விசாரணைகளை ஜூலை மாதம் மீண்டும் முன்னெடுக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன மீன்பிடி அமைச்சராக இருந்தபோது, கொரிய நிறுவனமொன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்குப் பதியப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித சேனாரத்னவுக்கு, கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கக் கால அவகாசம் கோரினர்.

அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் திகதியிட்டார். அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

 

 

Exit mobile version