ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரு பிரதான கட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் கூட்டணி அமைப்பதற்கான விசேட திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளையும் இணைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு விடுத்த விசேட முன்மொழிவுக்கு, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இந்த இணைப்பு முயற்சி முறிந்தால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் (SLPP) இணைந்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தள்ளப்படும் என அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையிலான வலுவான அரசியல் புரிதல் மற்றும் நல்லெண்ணம் காரணமாக, இந்த புதிய கூட்டணிக்கு இரு தரப்பிலும் பெரிய எதிர்ப்புகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ச கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்காவிட்டால் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவது கடினம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அமைப்பாளர்கள் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களைப் போலவே இப்போதும் தலைமையின் தயக்கம் காரணமாகவே இந்த இணைப்பு தாமதமாவதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.