யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடும் உத்தரவு!

115172051 109306773 exhuast reu 1

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசடைவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமாசுகி நடராஜா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை (Writ Petition), மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் திறந்தவெளியில் கழிவுகள் எரிக்கப்படுவதே பிரதான காரணமாகும். மேலும், தென்னிந்தியாவிலிருந்து காற்று வழியாக வரும் நுண் துகள்களும் இந்தப் பாதிப்பை அதிகரித்துள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே சுட்டிக்காட்டினார்.

இந்தக் காற்று மாசடைவு காரணமாகப் பொதுமக்கள் மத்தியில் சுவாச நோய்கள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாக ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆகியன ஒன்றிணைந்து, மாசடைவைக் குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறான பொதுப் பிரச்சினைகளை அரச நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே தங்களுக்குள் பேசித் தீர்க்க முடியும் என நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் மக்களின் ஆரோக்கியம் தொடர்பில் நீதிமன்றம் காட்டியுள்ள இந்தத் தீவிரத்தன்மை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

Exit mobile version