இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் குடியேற்றவாசிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரம்லாவிற்கு கிழக்கே உள்ள அபு நஜீ அல்-காப்னே பெடோயின் சமூகத்தின் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்த 40 குடியிருப்பாளர்களையும் 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். அந்தப் பகுதியை ‘மூடப்பட்ட இராணுவ மண்டலமாக’ இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஜெரிக்கோவிற்கு வடக்கே இருந்த ஷல்லால் அல்-அவ்ஜா சமூகம், இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தொடர் துன்புறுத்தலால் தற்போது அங்கிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு ஜெருசலேமின் ஜபல் முகாபர் பகுதியில், யாசர் மகேர் தானா எனும் பலஸ்தீனியர் இஸ்ரேல் அரசு விதிக்கும் அபாரமான அபராதக் கட்டணத்தைத் தவிர்க்க, தனது 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டைத் தானே இடித்துள்ளார்.
வெளியேற்ற நடவடிக்கைகளை ஆவணப்படுத்த முயன்ற மூன்று வெளிநாட்டு ஆர்வலர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன. அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாகப் புகுந்து வழிபாடுகளில் ஈடுபட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அல்-மலே பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்களைக் குடியேற்றவாசிகள் தடுத்து நிறுத்தியதால் குழந்தைகளின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேல் அமைத்துள்ள 916 இராணுவச் சோதனைச் சாவடிகளால் பலஸ்தீனியர்களின் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.