வங்கி ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த 42 வயதுடைய நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி தெற்கு களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அரச வங்கி ஒன்றில் கடமையில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரைச் சோதனையிட்டதில் இந்த மோசடி அம்பலமானது.
சந்தேக நபரிடமிருந்து அவருக்குச் சொந்தமில்லாத 11 வங்கி அட்டைகள் மற்றும் வேறொரு நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.பொலன்னறுவையைச் சேர்ந்த இவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.
வங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்களைக் குறிவைக்கும் இந்நாபர், அவர்களுக்கு உதவுவது போல் நடித்து இரகசியக் குறியீட்டை (PIN) அறிந்துகொள்வார். பின்னர், கைதேர்ந்த முறையில் அவர்களின் அட்டையைத் திருடிவிட்டு, வேறு ஒரு போலியான அட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டுத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறும், எக்காரணம் கொண்டும் உங்களது இரகசிய இலக்கத்தை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

