மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 31-ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட இறைச்சி, முட்டைகள் மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆமைகளைப் பிடிப்பதோ, அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதோ வனஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

