பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் நாளை (30) கையெழுத்திடப்படவுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் (RPCs) அரசாங்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
புதிய சம்பள உயர்வின் படி, தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக (200 ரூபாய் அதிகரிப்பு) உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வரவை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் நேரடியாக 200 ரூபாவினை வழங்கவுள்ளது. இதற்கமைய ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 1,750 ரூபாவை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தச் சம்பள அதிகரிப்பைத் தடையின்றி வழங்குவதற்காக, 2026 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 5,000 மில்லியன் (500 கோடி) ரூபாய் நிதியை விசேடமாக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டங்களுக்குப் பலன் கிடைக்கும் வகையில், இந்த ஒப்பந்தம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.