இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை ‘கரி நாள்’ ஆகப் பிரகடனப்படுத்தி, வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பொது அமைப்புகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணி அபகரிப்பு மற்றும் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த எதிர்ப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் போராட்டமாக மாற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தின் முக்கிய சிவில் அமைப்புகள் மற்றும் ஆளுமைகளுடன் மாணவர்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவி திருமதி இளங்கோதை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர். மு. கோமகன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்: . உள்ளிட்ட தரப்பினரைச் சந்தித்துத் தமது போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.
சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள சூழலில், வடக்கு – கிழக்குத் தழுவிய ரீதியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும், என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சந்திப்புகளின் மூலம் போராட்டத்திற்கான ஒருமித்த ஆதரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.