பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் திரண்டனர் 9 ஆயிரம் யாத்திரிகர்கள்
பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் நேற்று முதல் முறை
யாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் நெருக்கடிக்கு முந்திய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்று தேவாலய நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். கன்னி மேரியின் விண்ணேற்பைக் குறிக்கின்ற (L’Assomption) பெருநாளாகிய நேற்றைய தினம் அங்கு நடைபெற்ற பிரார்த்தனைகளில் பல்லாயிரக்கணக்கான ரோமன் கத்தோலிக்க யாத்திரிகர்கள் பங்குபற்றினர்.
பிரான்ஸின் பல பகுதிகளிலும் இருந்து வேற்று மதத்தினரும் லூர்து மாதாவைத் தரிசிக்க வந்திருந்தனர். கடந்த பல மாத காலமாக உலகெங்கும் உள்ள லூர்து மேரி யாத்திரிகர்கள் ஆலய பூசை வழிபாடுகளை இணையம் மூலமே கண்டுவருகின்றனர். ஆனால் சமீப நாள்களாக அடியார்கள் ஆலயத்துக்கு நேரில் வருகைதருவது அதிகரித்துள்ளது. ஆனால் அங்குள்ள பயணிகள் தங்கும் விடுதிகள் பல இன்னமும் மூடிக்கிடக்கின்றன.
கடந்த ஆண்டு சுகாதார நிலைமை காரணமாக சில மாதகாலம் மாதா வளாகம் மூடப்பட்டிருந்தது. அதனால் பெரும் வருவாய் இழப்பை அது சந்திக்க நேர்ந்தது. 1858 இல் மந்தை மேய்க்கும் சிறுமி ஒருத்திக்கு கன்னி மேரி நேரில் காட்சி கொடுத்தார் எனக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து லூட்ஸ் (Lourdes) வனப்பகுதி யாத்திரிகர்களது முக்கிய ஸ்தலமாக மாறியது.
அங்குள்ள குகை ஒன்றில் தனக்கு மேரி மாதா தரிசனமளித்தார் என்று அந்தச் சிறுமி கூறிய இடத்துக்கு உலகெங்கும் இருந்து நோயாளர்களும் யாத்திரிகர்களும் படையெடுத்து வருகைதரத் தொடங்கினர். கன்னி மேரி காட்சி கொடுத்த குகையின் சுவர்களைத் தொட்டு வணங்கி முத்தமிட்டால் தங்கள் நோய்கள், பிணிகள் அகலும் என்ற நம்பிக்கை கத்தோலிக்க மக்களிடம் இன்றும் உள்ளது.
பிரான்ஸிலும் ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்து வசிக்கின்ற ஈழத் தமிழர்கள் பலரும்கூட ஆண்டுதோறும் லூட்ஸ் மாதாவைத் தரிசிப்பதற்காக அங்கு வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment