மன்னார் மாவட்டத்தின் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் இன்று (27) நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. சிவராத்திரி விழாவைப் பக்தர்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி, பாதுகாப்பான முறையில் நடத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் ஊடாக விசேட பேருந்து சேவைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வீதி ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும்.
மின்சார விநியோகம், நீர் விநியோகம், தற்காலிக கொட்டகைகள் அமைத்தல் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ், முதலுதவி படை மற்றும் மருத்துவ அவசர ஊர்தி சேவைகளைத் தயார் நிலையில் வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
பொலிஸ் பாதுகாப்பு, தீயணைப்பு சேவை, விலை கட்டுப்பாடு மற்றும் வர்த்தக நிலையங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்புகள் அந்தந்த திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் நலன் கருதி மன்னார் மாவட்ட செயலகத்தின் கீழ் விசேட இணைப்பு அலுவலகம் ஒன்றும் திருத்தல வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.