திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

Kassapa Thera

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றப் பிரதான நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன் முன்னிலையில் இன்று (28) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளான பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தலைமையிலான 6 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

பிரதிவாதிகள் தரப்பில் பிணை கோரப்பட்ட போதிலும், பொலிஸார் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய கடும் ஆட்சேபனைகளை அடுத்து, பிணைக் கோரிக்கையை மன்று நிராகரித்தது.

சந்தேகநபர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாகக் குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தமது தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (FR) மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்தது. அந்த வழக்கிற்காகத் திருகோணமலை நீதிமன்றத்தின் தற்போதைய விசாரணைகளின் குரல் பதிவுகள் மற்றும் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள டச்பே கடற்கரைப் பகுதியில், உரிய அனுமதியின்றி கட்டுமானங்களை எழுப்பியமை மற்றும் மத அடையாளங்களை நிறுவியமை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் சட்டங்களை மீறியதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கு, திருகோணமலை பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 

Exit mobile version