டிப்பர் மோதியதில் இளம்பெண் பலி – சாரதி கைது
இன்று காலை 10.30 மணியளவில் கோப்பாய் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை, அவர்கள் பின்னால் சென்ற டிப்பர் வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் சந்தி சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் கைதடிப் பக்கமாக மோட்டார் சைக்கிள் கொண்டிருந்தபோது, அதன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை முந்த முற்பட்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் டிப்பர் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த பெண் (வயது – 35) விழுந்துள்ளார். டிப்பர் சில்லினுள் அவரின் தலைப் பகுதி அகப்பட்டு நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்ற அவரின் கணவர் மற்றைய பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment