இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் இஞ்சி 300 ரூபா முதல் 500 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டது.
விநியோகத் தட்டுப்பாடு காரணமாக தற்போது ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விலை மேலும் அதிகமாகக் காணப்படுகிறது.
கடந்த நவம்பர் இறுதியில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாட்டின் பிரதான இஞ்சி சாகுபடி நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியமையால் சந்தைக்கு வரும் இஞ்சியின் அளவு பெருமளவில் குறைந்துள்ளது. இதுவே இந்த அதீத விலை உயர்வுக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது.
தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இந்த பாரிய இடைவெளி காரணமாக, வரும் வாரங்களிலும் இஞ்சியின் விலை உயர்ந்த மட்டத்திலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.