கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக வவுனியா வடக்கில் எழுச்சி: பிப்ரவரி 2-இல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

articles2FgCUZnYjw1aUQzBj7p7CC

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ‘கிவுல் ஓயா’ (Kiwul Oya) திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 02-ஆம் திகதி திங்கட்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக, நெடுங்கேணியில் இன்று (27) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. வவுனியா வடக்கு பொது அமைப்புகள் மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.

திகதி மாற்றம்: முன்னதாக ஜனவரி 30-ஆம் திகதி நடத்தப்படவிருந்த போராட்டமானது, பொது அமைப்புகளின் ஆலோசனையின் பேரில் பிப்ரவரி 02-ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்று காலை நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் காணி அபகரிப்பு, வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் குடியேற்றச் சவால்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப. சத்தியலிங்கம், து. ரவிகரன், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் வவுனியா வடக்கின் பல்வேறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், திட்டமிட்ட காணி அபகரிப்புகளை முறியடிக்கவும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version