தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், அரசியலில் கால்பதித்த பின்னர் முதன்முறையாக இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகமான NDTV-க்கு இன்று (31) ஒரு பிரத்தியேக நேர்காணலை வழங்கியுள்ளார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அரசியலில் தன்னை ஒரு ‘கிங்மேக்கர்’ (Kingmaker) என்று அடையாளப்படுத்த விரும்புவதில்லை என விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “நான் வெற்றி பெறுவேன். நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? என்னைச் சுற்றித் திரளும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் (Stampede) தனக்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்ததாகவும், அது இன்னும் தன்னை ஏதோ ஒரு வகையில் பாதித்துக் கொண்டிருப்பதாகவும் விஜய் மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
தனது இறுதித் திரைப்படமான ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை மற்றும் இதர அனுமதிகள் கிடைப்பதில் நீடிக்கும் தாமதம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். தனது அரசியல் வருகையால் இப்படம் குறிவைக்கப்படலாம் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்ததாகவும், ஆனால் இதனால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொண்டர்களாகும் ரசிகர்கள்: தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களை ஒரு கட்டுக்கோப்பான கட்சித் தொண்டர்களாக மாற்றுவதே தனது தற்போதைய நோக்கம் என விஜய் தெளிவுபடுத்தினார்.
இந்தத் தேர்தலை ஒரு கருத்துக் கணிப்பிற்காகவோ அல்லது அடையாளத்திற்காகவோ அவர் எதிர்கொள்ளவில்லை, மாறாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்காகவே களம் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். அரசியலில் நீண்ட காலப் பயணத்திற்கு அவர் தயாராக இருப்பதை இந்த நேர்காணல் உறுதிப்படுத்தியுள்ளது.