பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கர்ப்பமாக இருந்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவரது கர்ப்பத்தைக் கலைக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர்கள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் பெண்ணின் உரிமைகள் குறித்துப் பின்வரும் மிக முக்கியமான கருத்துக்களை முன்வைத்தது.
ஒரு பெண்ணின் உடல் சார்ந்த ஒருமைப்பாடு மற்றும் தனது உடலைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் ‘இனப்பெருக்கத் தெரிவு’ ஆகிய உரிமைகள் மிகவும் மேலானவை.விருப்பமில்லாத ஒரு கர்ப்பத்தைச் சுமக்கச் சொல்லியோ அல்லது அதனை முழுமைப்படுத்தச் சொல்லியோ எந்தவொரு பெண்ணையும் நீதிமன்றம் ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது.
பிறக்கப்போகும் குழந்தை சட்டபூர்வமற்றது; தாய் அந்தக் குழந்தையைச் சுமக்க விரும்பவில்லை. இத்தகைய சூழலில் தாயின் இனப்பெருக்க தன்னாதிக்கத்திற்கே (Reproductive Autonomy) முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்தியச் சட்டப்படி (MTP Act), பொதுவாக 24 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க வேண்டுமானால் நீதிமன்றத்தின் விசேட அனுமதி அவசியமாகும்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தமையாலும், அந்தக் கருவைச் சுமப்பது அவரது மனநிலை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் என்பதாலும், 30 வாரங்கள் கடந்த நிலையிலும் மருத்துவ ரீதியாகக் கர்ப்பத்தைக் கலைக்க உச்ச நீதிமன்றம் இந்த விசேட அனுமதியை வழங்கியது.