Suspect in Gampola 16-Year-Old Girl Murder Found Dead After Committing Suicide Following the Homicide.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 16 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் இன்று (நவம்பர் 15) தெரிவித்துள்ளனர்.
மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (நவம்பர் 14) இரவு தனது வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், இது தனிப்பட்ட அல்லது காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். கொலைச் சம்பவம் இடம்பெற்ற பிறகு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காகக் கம்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
திருகோணமலையில் தொழில் புரிந்த 27 வயதுடைய அந்த இளைஞர், கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் இரவு (நவம்பர் 14) வீடு திரும்பியிருந்த நிலையில், சம்பவத்துக்குப் பிறகு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கம்பளை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.