திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுமார் சில மணிநேர விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கெஹெல்பத்தர பத்மேவுக்கும் எனக்கும் இடையில் அரசியல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவ்விதத் தொடர்புகளும் இல்லை. அவர் என்னுடன் இணைந்து அரசியல் செய்யவில்லை.
பத்மே எனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது தந்தையை எனக்குத் தெரியும். அவர் என்னுடன் அரசியல் ரீதியாகத் தொடர்பில் இருந்தவர், ஆனால் அதுவும் ஒரு சாதாரண அறிமுகம் மாத்திரமே.
கெஹெல்பத்தர பத்மே ஏற்கனவே வழங்கியுள்ள ஒரு வாக்குமூலம் குறித்து அதிகாரிகள் வினவியபோது, அது பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என ரணதுங்க பதிலளித்துள்ளார்.
மனுதின பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Interpol Red Notice) அடிப்படையில் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டார்:
பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவன் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல பாரிய குற்றச்செயல்களை வழிநடத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர் தற்போது சிஐடி அதிகாரிகளின் விசேட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் முன்னிலையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர், சிஐடி அழைக்கும் போது சமூகமளிப்பதாகக் கூறியுள்ளார்.