புவி வெப்பமடைதல் காரணமாக கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வரும் நிலையில், அங்கு வெளிப்படும் இயற்கை வளங்களைக் கைப்பற்ற அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே புதிய புவிசார் அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது.
உலக சராசரியை விட இரு மடங்கு வேகமாக கிரீன்லாந்து வெப்பமடைந்து வருவதால், பனிக்கு அடியில் மறைந்திருந்த அபரிமிதமான வளங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன:
தங்கம், யுரேனியம், இரும்புத் தாது மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு அவசியமான அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements) அங்கு பெருமளவில் உள்ளன.பனி உருகுவதால் ஆசியா மற்றும் ஐரோப்பா இடையிலான பயணத் தூரத்தைக் குறைக்கும் புதிய ஆர்க்டிக் கடல் வழிப்பாதைகள் உருவாகின்றன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்காணிப்பிற்கு (Space Surveillance) கிரீன்லாந்து மிக அவசியமான தளம் எனக் கருதுகிறார். முன்னதாக இதனை வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர், தற்போது பாதுகாப்பு உடன்படிக்கைகள் மூலம் அங்கு தனது செல்வாக்கை நிலைநாட்ட முயல்கிறார்.
தனது துருவ பட்டுப்பாதை (Polar Silk Road) திட்டத்தின் கீழ், கிரீன்லாந்தின் உள்கட்டமைப்பு மற்றும் சுரங்கத் தொழில்களில் பாரிய முதலீடுகளைச் செய்ய சீனா தீவிரம் காட்டி வருகிறது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் முழுமையாக உருகினால் உலகக் கடல் மட்டம் 7.4 மீற்றர் வரை உயரக்கூடும். இது கடற்கரையோரங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்க டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் மறுத்து வரும் சூழலில், வளங்களுக்கான இந்தப் போட்டி கிரீன்லாந்தை உலகின் முதல் ‘காலநிலை போர்’ (Climate War) முனையாக மாற்றக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.