ஈரானிய அரசாங்கத்தின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், அந்த நாட்டுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட நாடுகளுக்கு மேலதிக வரிகளை (Extra Tariffs) விதிப்பதற்கான அதிரடி உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
இந்த ஆணையின் கீழ் நேரடியாக வரி விகிதங்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 25% வரை கூடுதல் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்துவிட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் இந்த வரி விதிப்புக்கு உள்ளாகும்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பிற நாடுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் வர்த்தகத்தையும் முடக்குவதே இந்த ஆணையின் பிரதான நோக்கமாகும்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஓமானில் இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கிடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலிலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பேச்சுவார்த்தை மேசையில் ஈரானுக்குப் பாரிய அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு தந்திரோபாய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.