இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும் கால்நடை சார்ந்த அனைத்துப் பொருட்களுக்கும் கிர்கிஸ்தான் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கிர்கிஸ்தான் உணவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாடு, ஆடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட விலங்கு உற்பத்திப் பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.
தலைநகர் பிஷ்கேக் (Bishkek) விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நிபா வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், நிலைமையை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக் கருதி கிர்கிஸ்தான் இந்தத் தற்காலிகத் தடையை விதித்துள்ளது.