முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமா ஆகியோரை அவமதிக்கும் வகையிலான இனவாதக் காணொளி ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ட்ரம்பின் அதிகாரப்பூர்வ ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், ஒபாமா தம்பதியினரின் முகங்கள் குரங்குகளின் உருவங்களுடன் இணைத்து (Morphing) மிகவும் இழிவான முறையில் காட்டப்பட்டிருந்தன.
இந்தக் காணொளி பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. குடியரசுக் கட்சியின் சில உறுப்பினர்களும் இதனை ஒரு ‘அநாகரிகமான செயல்’ என விமர்சித்தனர்.
இந்த விவகாரத்தில் வெள்ளை மாளிகையும் ஜனாதிபதி ட்ரம்பும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இது ஒரு ஊழியரால் செய்யப்பட்ட தவறு என்றும், ஜனாதிபதி ட்ரம்ப் இதனைப் பார்க்கவில்லை என்றும் விளக்கமளித்தது.
ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அந்த வீடியோவைப் பகிருமாறு தானே பணிப்புரை விடுத்ததாக ஒப்புக்கொண்டார். அதேநேரம், அதிலிருந்த இனவாதச் சித்தரிப்புகளைத் தான் கவனிக்கவில்லை என மழுப்பலாகப் பதிலளித்தார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் வரலாற்றைக் கொண்டாடும் மாதம் (Black History Month) அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இவ்வாறானதொரு பதிவைப் பகிர்ந்தமை கறுப்பின மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்திடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.