பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இன்று தனது பிரபுக்கள் சபை (House of Lords) பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான இரகசிய ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியின் போது, பிரித்தானிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவிருந்த மிக முக்கியமான நிதிசார் முடிவுகளை மெண்டல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் கசியவிட்டுள்ளார்.
2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் எப்ஸ்டீன் மூலம் மெண்டல்சனுக்கு மூன்று தவணைகளில் மொத்தம் 75,000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
துணைவருக்கு வழங்கப்பட்ட பணம்: 2009 இல் மெண்டல்சனின் துணைவருக்கு எப்ஸ்டீன் 10,000 பவுண்டுகளை அனுப்பியதாகவும் அந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மெண்டல்சனின் இந்தச் செயல்களைக் கடுமையாகச் சாடியுள்ள பிரித்தானியப் பிரதமர், அவர் தனது நாட்டைத் தற்காப்பதில் தவறிவிட்டார் என்றும், அவரது செயல் அருவருப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க தூதுவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மெண்டல்சனின் ‘பிரபு’ (Lord) பட்டத்தைப் பறிப்பதற்கான புதிய சட்டங்களைக் கொண்டுவரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

